ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம்


யானை முகம் மூன்று விழிகளும் நான்ற வாயினையுமுடைய ஞானமே வடிவான விநாயகப்பெருமான் பரராஜசேகரன் என்னும் திருநாமத்துடன் தெய்வீகத்திருவுருவும், வைதீகத்திருவுருவம் மிக்க இணுவையம்பதியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றான்
.
எம்பெருமான் கோயில் கொண்ட வரலாற்றைக்கூறுவதில் நாம் பெருமை அடைகின்றோம். இவ்வாலயமானது இற்றைக்கு ஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியது.மேலும் அரசபரம்பரையோடு தொடர்புடைய பெருமையுடையது.யாழ்ப்பாண அரசின் சிம்மாசனப் பெயர்களில் ஓன்றான ‘பரராஜசேகரன்’ என்னும் பெயர்தாங்கி நிற்கின்றது.14,15ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தை ஆரியச்சக்கரவர்த்திகள் ஆண்டுவந்தனர். அவர்களில் பதினோராம் தலைமுறையில் வந்த பரராஜசேகர மன்னன் இவ்வாலயத்தை கட்டினான். இதனால் இவ்வாலயத்திற்குப் பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் என்னும் திருநாமம் வழங்கப்பட்டு வருகின்றது.



இக்காலகட்டத்தில் இலங்கையானது அந்நியாரட்சிக்குட்பட்டிருந்தது. இக்காலம் அமைதியற்ற ஒருசூழ்நிலை காணப்பட்டது. சமயப்பூசல்களும், போட்டிகளும் நிறைந்த காலமாக இருந்தது. இக்காலத்தில் சமயக்கோட்பாடுகளை வளர்க்க,வழிபாட்டு முறைகளை வளர்க்க, கலைகலாச்சாரத்தை வளர்க்க ஆலயங்கள் பயன்பட்டன. காலத்தின் தேவையை உணர்ந்தனர் ஆரியச்சக்கரவர்த்திகள்.


ஆரியச்சக்கரவர்த்திகள் நலலூரை இரசாதானியாக்கி யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்தனர். இவர்கள் சமயப்பற்றுடையவர்களாகக் காணப்பட்டனர். தென்னாட்டின் கோவில் போன்று ஈழத்திலும் கோயில்களைக்கட்டுவதில் மன்னர்கள் ஆர்வம் காட்டினர். கோபுரங்களும் கோயில்களும் சமயவளர்ச்சியைத் தூண்டின. எனவே யாழ்ப்பாணத்தில் பலபாகங்களிலும் ஆலயங்கள் தோற்றம் பெற்றன. எனவே ஆரியச்சக்ரவர்த்திகள் மரபில் வந்த பரராசசேகரமன்னன் ஆன்றோரும், சான்றோரும் மிக்கதும், சைவவேளான்குடிகள் வாழ்கின்றதுமான இணுவை என்னும் கிராமத்தை தேர்ந்தெடுத்து விநாயக்பெருமானுக்கு மாடமாளிகை,கூடகோபுரங்களுடன் கூடிய ஆலயத்தை எழுப்பி வழிபட்டு வரலாயினான். இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஆலய உட்பிரகாரத்தில் மன்னனும் பிரதானிகளும் வழிபடுங்காட்சி சிற்பமாகவும்,ஓவியமாகுவம் வரையப்பட்டுள்ளது. மேலும் கலாநிதி சிற்றறம்பலம் யாழ்ப்பாண இராட்சியம் என்னும் நூலிலிருந்தும் இதனை அறியலாம்.
பரராஜசேகர மன்னன் காலம் (1478-1519) வரையாகும். எனவே இவ்வாலயமும் அத்தனைக்குப்பழமை வாய்ந்ததாகும். புரராஜசேகரன் போர்மேல் செல்லுங்கல் இப்பெருமானை வழிபட்டுச் சென்றதாகவும், நூற்றுக்கும் அதிகமான இளநீர்க்குலைகள் யானைமேல் ஏற்றி வந்தும், குடம் குடமாகப் பால் கொண்டுவந்தும் அபிடேகித்து வணங்கினான் என்றும் நாளும் வற்றாது குளம்போல் நின்ற இடம் குளக்கரை எனவும் வழங்குவதாயிற்று. மன்னனால் ஆலயத்திற்கு அருகே ஒரு கிணறும் திருக்கேணியும்,திருமஞ்சக்கிணறும் தோண்டப்பட்டது. ஆகம விதிப்படி பூசை வழிபாடுகள் நடைபெற்று வந்தன.


கோயிலின் அமைவிடம்
யாழ்ப்பாணத்திலிருந்து இணுவில் நான்காவது மைல் தூரத்தில் உள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன் துறை வீதி இணுவிலை இரு பகுதிகளாக ஊடறுத்து தெற்கு வடக்காக செல்கின்றது. இவ்வீதியை கிழக்கு மேற்காக மானிப்பாய் வீதி வந்து தொடுகின்றது. இவ்வீதியானது காங்கேசன்துறை வீதியைத் தொட்டு மேற்கே இணுவில் கந்தசாமி கோயில் வரை சென்று திரும்பிப் பரராஜசேகரப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாக சென்று மருதடி விநாயகர் ஆலய வீதியைத் தொடுகின்றது. இணுவில் முருகன் ஆலயத்திற்கும் பரராஜசேகரப்பிள்ளையார் ஆலயத்திற்கும் இடைத்தூரம் நூறுயார் வரை இருக்கும். வீதியின் தெற்கே பரராஜசேகரர் ஆலயம் என்றால் வடக்கே இப்போது இந்துக்கல்லூரி என அழைக்கப்படும் சைவப்பிகாச வித்தியாசாலை அமைந்துள்ளது. இவ்வீதியின் இருமருங்கும் ஆலயத்திருப்பணிக்கு உதவுவோர் இருக்கின்றனர். பிராமணர் குடும்பங்கள், பிரசித்தி பெற்ற தவில் நாதஸ்வர வித்துவான்கள் குடும்பங்கள், பூமாலை, சப்பரம்,காவடி தந்துதவுவோர் குடும்பங்கள் கூடியமர்ந்துள்ளனர். இணுவில் ஓர் அழகிய கிராமம். இருபதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் அழகு செய்ய நடுநாயகமாகப் பரராஜசேகரப்பெருமான் அருள்பாலிக்க சித்தர்களும், பக்தர்களும், கலைகளும், கலைஞர்களும், வாழுகின்ற திருவூராக விளங்குகின்றது.


விநாயக வழிபாடு ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் முதலிடம் பெற்றது. இந்த வகையில் செகராஜசேகரப்பிய்iயார், கருணாகரப்பிள்ளையார், வெயிலுகந்தப்பிள்iயார், பறாளை விநாயகர் போன்ற பல விநாயகர் ஆலயங்கள் இக்காலத்தில் எழுந்தன. விநாயகர் வணக்கம் முதன்மை பெற்றது.
பரராஜசேகரப்பிள்ளையாரின் திருவுருவம் தென்னிந்தியச் சிற்பிகளால் செதுக்கப்பட்டு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தது என்பர். கருவறையில் இருக்கும் இவ்விநாகப்பெருமான் தனது வலக்கரத்தில் அங்குசத்தையும், இடக்கரத்தில் பாசத்தையும், கீழேயுள்ள வலக்கரத்தில் ஒடிந்த தந்தத்தையும், இடக்கரத்தில் மோதகத்தையும் தும்பிக்கையில் கும்பத்தையும் வைத்திருக்கின்றார். மேலும் சுளகு போன்ற இருசெவிகளும் பெரிய வயிற்றையும் உடையவராகவும் இடது பாதத்தை மடித்தும் வலது பாதத்தை தொங்கவிட்டபடி காடசிதருகின்றார். இத்தோற்றமானது ஆன்மாக்களின் வினைகளைப்போக்கி பேரின்பத்தை நல்குவதாகவும் அமைந்துள்ளது.
தெனனிணுவைப் பதியினிலே கோயில் கொண்ட எம்பெருமான் திருக்கோயில் போர்த்துக்கேய, டச்சுக்காரர் வருகையினால்; இடர்பட்டது. மக்கள் மதம் மாற்றப்பட்டனர். சைவ ஆசாரப்படியாரும் வாழ முடியாத ஒரு நிலை. சைவஆலயங்கள் அழித்தொழிக்கப்பட்டன. இந்த நிலையிலும்கூட இணுவில் சைவப் பெருங்குடி மக்கள் இடர்பாடுற்ற எமது ஆலயத்தை காத்தனர். மூலமூர்த்தியை சிறுகொட்டகையில் வைத்து வழிபட்டனர். அந்நியப்படைகள் வந்தபோது ஆலயம் அன்று மடம் என்று மடம் என்று பதிலளித்தனர். அன்றிலிருந்து இது மடத்துவாசல் பிள்ளையார் கோயில் எனவும் அழைக்கப்படலாயிற்று. இவ்வாறு பல ஆண்டுகள் சென்றது. அடியார்க்கு எளியவன் இறைவன் ஆவான். தொண்டர்தம் உள்ளத்து ஒடுக்கமானான். விநாயக அடியார்தம் உள்ளங்களில் உறைந்து நின்று அருள்பரிந்தான். உள்ளத்தினுள்ளே இறைவன் உருவங்கண்டு தூங்காத அடியவர்கள், அவனருளாலே ஊக்குவிக்ப்பட்டனர். ஸ்ரீ பரராஜசேகரனுக்கு கோவிலெடுக்க மனமொருமைப்பட்டனர். இறைவன் உள்நின்று உய்த்த அயராது திருப்பணியில் ஈடுபட்டனர். இதன் பேறாக மடாலயத்தின்கண் மூர்த்தியும்,மணிக்கூட்டு வைரவரும், ஒருதிருமஞ்சனக்கிணறும், ஒருதிருக்கேணியுமாக இருந்த ஆலயம் வானளாவிய இராசகோபுரத்துடனும், பரிவார மூர்த்திகளுடனும், பஞ்சமுக விநாகருடனும், மணிக்கூட்டுக்கோபுரமும், அழகிய முகப்பை அலங்கரிக்கும் மணிமண்டபமும் போததென்று தென்மேல் திசையில் வானைமுட்டும் மூன்றுமாடிக்கட்டடங்களைக்கொண்ட மணிமண்டபமும், தெற்குவாசலில் ஐந்துதள கோபுரமும் அமையப்பெற்று உலகின் பெருமையடன் திகழ்கின்றது. இதற்கெல்லாம் அடிநாதமாக இருப்பவன் ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையாரே.
கோவில் வரலாற்றை எண்ணும்போது மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாகத் தொடங்கினற்கு வார்த்தை சொலச் ‘சற்குருவும் வாய்க்கும் பராபரமே’ என்ற அருள்வாக்கு நினைவிற்கு வருகின்றது. இது கோயில் திருப்பணியின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. புதிதாக ஆலயங்களை எழுப்புவதிலும், பழுதுபட்ட ஆலயங்களைச் சீர்திருத்துவதும் ஆமலான பணி இது சிவப்பணி இது மேலான முக்தியின்பத்தை தருவது. அந்நியரால் அழிபாடுற்று பழுதடைந்த நிலையில் பல வருடங்களாக கிடந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு அத்திவாரமிட்டவர்களை நாம் மறந்துவிடலாகாது. ஊரவர் பொருளுதவி பெற்றும், பிடியரிசி பெற்றும் கட்டிமுடிப்பராயினர். நித்திய நைமித்தியங்களாலும், புராண படனங்களாலும் விழாக்களினாலும் ஆலயம் சிறப்புற்றோங்கியது.
உண்ணும்போது ஒரு கைப்பிடி என்பது திருமூலர் வாக்கு. ஒவ்வொரு குடி மக்களுக்கும் இவ்வாலயத்திருப்பணியில் பங்குண்டு. பிடியரிசிமுறை ஒவ்வொருவரையும் சிவப்பணியில் சேர்ப்பித்தது. நாளாந்தம் தாம் சமயலுக்கு எடுக்கும் அரிசியில் ஒவ்வொரு பிடியை இது பிள்ளையாருக்கு என்று ஒரு பாத்திரத்தில் இட்டு வைப்பர்.கறித்த காலத்தில் இதற்கென நியமிக்ப்பட்டவர்களால் இப்பிடியரிசி சேர்க்கப்பட்டு விற்றபணத்தைக் கொண்டு ஆலயத்திருப்பணிகளும் நித்திய பூசைச் செலவுகளும் ஈடுசெய்யப்பட்டன. .
மேலும் எமது ஊரிலுள்ள சுருட்டுத்தொழிற்சாலைகளில் இருந்தும் சுருட்டுவோர் பத்து பத்துச் சுருட்டுகளை பிள்ளையாருக்கென விடுவர். அவை மாத முடிவில் கணக்கிட்டுப்பணமாகப் பெருமானுக்கு அனுப்பப்பட்டது. இதைவிடப் பணவசதி படைத்தோரும் பண உதவி புரிந்து ஆலயத்தைக் கட்டியெழுப்பினர்.
காலத்திற்கு காலம் கும்பாபிடேகங்கள் ஆகம விதிப்படி நடைபெற்றுள்ளன. ஆதியில் சுன்னாம்புக்கட்டிடமாக இருந்த ஆலயம் 1928 ல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளின் பின் 1939ம் ஆண்டளவில் கற்கோவிலாக்கப்பட்டு ஸ்ரீ சதாசிவக்குருக்களினால் கும்பாபிஷேகம் ஆகம விதிப்படி நடாத்தப்பட்டு, மண்டலாபிஷேகமும் உற்சவங்களும் தொடர்ந்து நடைபெற்றன. தொடர்ந்து 1961ம் ஆண்டு தை மாதம் 9ம் நாளிலும்,1972ம் ஆண்டு ஆவணி மாதம் 19லும்(04.09.1972), 1984ம் ஆண்டு தைமாதம் 23ம் நாளிலும் (06.02.1984) இராசகோபுரமும் நடைபெற்றன. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 1995 ல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1997 ம் ஆண்டு தை மாதம் 27 ம் நாள் (09.02.1997) மகா கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது.
ஆரம்ப காலத்தில் மூலமூர்த்தியுடன் எழுந்தருளி விநாயகருடனும் அமைந்த ஆலயம் இன்று பஞ்சமுக விநாயகர், நடராஜர், முத்துக்குமாரசாமி, மகாலட்சுமி, சந்தானகோபாலர், வைரவர், நாகதம்பிரான், நவக்கிரகங்கள், பரிவார மூர்த்தியதகவும் மேலும் நர்த்தன விநாகர், பிரம்ம கணபதி, சதுர்முக கணபதி, துர்க்கை அம்மன், தஷ்னாமூர்த்தி, முதலிய தெய்வங்கள் கோஷ்ட தெய்வங்களாகவும், பாலகணபதி, பாலமுருகன், சூரியன், சந்திரன், முதலிய தெய்வங்களும்,சிவலிங்கம், சண்டேசுவரர், இராசேஸ்வரி அம்மன் முதலிய தெய்வங்களும், நித்திய விநாயகரும் தெய்வங்களாக அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோயிலின் முகப்பை ஐந்து தளங்கள் கொண்டதும் தெய்வீக கலையம்சங்கள் பொருந்தியதுமான வானளாவிய இராசகோபுரம் அலங்கரிக்க அயலே வடகீழ்பக்கமாக அமைந்த கண்டாமணிக் கோபுரம் எழுந்து நிற்க, கிழக்கே தீர்த்த மண்டபம் வர்ண வேலைப்பாடுகளுடன் காட்சிதர,தெற்கே பஞ்சமுக விநாகப் பெருமானுக்குரிய ஐந்துதள இராசகோபுரம் அழகிய சிற்ப வேலைகளுடன் காட்சிதர, மேற்கே வானவரும் வந்து வழிபடும் அளவிற்கு அழகிய மணிமண்டபமும் காடசிதர, பரராஜசேகரன் ஆலயத்தோடு கூடியதாக தெற்கே கல்யாண மண்டபம் விளங்க, வடக்கே கல்வித்தானம் வழங்கும் இந்துக்கல்லூரி அமைந்திருக்க ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் கொலுவிருந்து ஆட்சி செய்கின்றான்.
மேலும் இவ்வாலயத்திருப்பணி வேலைகளை இவ்வூர்ப்பிரமுகர்களும், அடியவர்களும் சேர்ந்து நிறைவேற்றி வருகின்றனர். இவ்வாலயம் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், சபா மண்டபம், ஸ்தம்ப மண்பம், வசந்த மண்டபம், யாக சாலை, பாக சாலை, வாகன சாலை, மணி மண்டபம், மணிக்கூட்டு வைரவர் ஆலயம் என்ற வகையில் அமைந்துள்ளது.
இவ்வாலயம் சிறந்தோங்க ஊர்த் தொண்டர்களும், இளைஞர்களும், வர்த்தகப் பெருமக்களும் உதவியுள்ளனர்.
இவ்வாலயப்பிரதம குருவாக விளங்கி ஆகம விதிப்படி பூசைகள் நடாத்தி வருபவர் சிவஸ்ரீ வை.சோமாஸ்கந்தக்குருக்கள் ஆவர்களும், அவருக்கு அடுத்தாற்போல் அவரது மகன் சோ.அரவிந்தக்குருக்களும் ஆவார். இதற்கு முன்னதாக சதாசிவக்குருக்கள், வைத்தீஸ்வரக்குருக்கள், சிவஞானக்குருக்கள் ஆகியோர் அவ்வாலயப் பிரதம சிவாச்சாரியார்களாக இருந்து பூசைகள் விழாக்களை நடாத்தியுள்ளனர்.
ஆலயத்தில் தினமும் ஆறுகாலப்பூசைகள் நடைபெற்று வருகின்றது. நித்திய விநாகர் தினமும் வீதிசுற்றுவது வழமை மேலும் மகோற்சவ விழாக்கள், மாதப்பிறப்பு அபிடேகங்கள்,விசேட நாட்களான சிவராத்திரி, வருடப்பிறப்பு, பங்குனி உத்திரம், ஆனி உத்திரம், ஆடிப்புரம், பூர்வபக்க சதுர்த்தி, அமரபக்க சதுர்த்தி, நவராத்திரி, கௌரி விரதம், கந்த சஷ்டி, திருவெம்பாவை, விநாயகர் சஷ்டி, முதலியனவும் கலசாபிடேகம் முதலியனவும் நடைபெற்று வருகின்றது.
விழாக் காலங்களில் வீதி சுத்தம் செய்தல், பேரிகை அடித்தல்,தீவர்த்தி பிடித்தல், சுவாமி காவுதல், கூட்டுதல், கழுவதல் முதலிய தொண்டுகளையும் இவ்வூர் இளைஞர்கள் செய்து வருகின்றார்கள். பக்தியில் சிறந்து விழங்கும் இவ்வாலயமானது தனது திருப்பணிகளை விஸ்தரித்துக் கொண்டே செல்கின்றது. அதாவது சமூகமயமாக்கற் பணிகளில் சிறந்து விளங்குகின்றது.
கல்வி வசதி,வறுமைப்பட்டோருக்கு உதவுதல்,வசதி அற்றோருக்கு வைத்தியச் செலவு செய்தல் போன்ற பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. ஆதிகாலத்தில் ஆலயங்கள் சமூகத்திற்கு வேண்டிய பணிகளை உதவும் வகையில் அமைந்திருந்தன. இதே போன்றே ஒரு நிலை இங்கும் உருவாகி ஆலயம் சமூகத்திற்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. அதே வேளை ஆத்மீகத்தை வளர்க்கும் நிலையமாகவும் விளங்குகின்றது.
இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் பரராஜசேகரர் மீது பாடல்களும், திருவூஞ்சல்களும் பாடப்பட்டுள்ளன. எம்பெருமானது புகழ் திக்கெட்டும் பரவட்டும்.
[box type=info]ஆக்கம் :-பண்டிதை திருமதி வை.கணேசபிள்ளை ஆசிரியர், இணுவையூர்.
நன்றி http://www.inuvilinfo.com இணையம்.[/box]

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP