யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (University of Jaffna) இலங்கையிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களுள் ஒன்று. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமொன்றின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்த போதிலும், 1974 ஆம் ஆண்டிலேயே இது நிறுவப்பட்டது. சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியை மையமாக வைத்து இப்பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியது

வரலாற்றுப் பின்னணி

இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகளில் பல்கலைக்கழகமொன்று இல்லாமை ஒரு பெருங் குறையாக இருந்துவந்தது. எனினும் இத்தகைய ஒரு பல்கலைக்கழகம் எங்கே நிறுவப்பட வேண்டுமென்பதில் தமிழர் பிரதிநிதிகளிடையே ஒத்தகருத்து நிலவவில்லை. இலங்கைத் தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, திருகோணமலையிலேயே பல்கலைக் கழகம் நிறுவப்பட வேண்டுமென்று வாதிட்டுவந்தது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரும் வேறு சிலரும் யாழ்ப்பாணத்தில் இது அமையவேண்டுமென்றனர். இலங்கையின் தமிழர் பிரதேசத்தின் மத்திய பகுதியில் திருகோணமலை அமைந்திருப்பதும், தமிழர் பகுதியின் தலைமையிடமாகத் திருகோணமலையை வளர்த்தெடுக்கும் நோக்கம் இருந்ததும் தமிழரசுக் கட்சியினர் திருகோணமலையை அமைவிடமாக வலியுறுத்தி வந்ததற்கான காரணங்களிற் சில. திருகோணமலையில் குடித்தொகை அடிப்படையில் தமிழர் விகிதாசாரம் குறைந்துவருவதைத் தடுத்து நிறுத்தவும் இது உதவுமென அவர்கள் கருதினார்கள்.


அக்காலத்தில் யாழ்ப்பாண மாணவர்களே மிகப் பெரும்பான்மையாகப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகினர். எனவே உடனடியாக யாழ்ப்பாணத்திலேயே பல்கலைக்கழகம் தேவை என எதிரணியினர் வாதாடியதுடன், திருகோணமலையின் குடித்தொகை நோக்கங்களைப் பொறுத்தவரை தமிழருக்குப் பாதகமான விளைவுகளே ஏற்படக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்தார்கள்.
1965 ல் பதவிக்குவந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசில், தமிழரசு, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பங்காளிகளாக இருந்தும், தமிழர் பகுதியொன்றில் பல்கலைக்கழகமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு சாதகமான நிலைமை இருந்தபோதிலும் கூட, தமிழரிடையே ஒத்தகருத்தின்மை காரணமாக எதுவும் நடைபெறவில்லை. 1972ல் இலங்கை சுதந்திரக் கட்சி வெற்றிபெற்று சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமரான பின்னர். தமிழரசுக் கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகமொன்றை நிறுவி 1974 ஆம் ஆண்டு திறந்துவைத்தார்.
அக்காலத்தில் இலங்கையிலிருந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இலங்கைப் பல்கலைக் கழகம் என்ற ஒரே பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு வளாகங்களாகவே செயற்பட்டு வந்தன. எனவே யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகமும், "இலங்கைப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாண வளாகம்" என்றே அழைக்கப்பட்டது. பின்னர் இவ் வளாகங்கள் அனைத்தும் தனித்தனியான பல்கலைக்கழகங்களான போது, யாழ்ப்பாண வளாகமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆனது.

வவுனியா வளாகம்

இதன் ஓர் வளாகம் வவுனியாவின் நகரப்பகுதியில் உள்ளது. குருமண்காட்டில் விஞ்ஞானபீடமும், ஆங்கில கறகைநெறிகளுக்கான பீடம் மின்சாரநிலையத்திற்கு அருகிலும் வணிகக் கல்விப் பீடமானது வவுனியா உள்வட்ட வீதியிலும் அமைந்துள்ளது. வவுனியாப் பீடத்திற்கான ஒருதொகை நிலப்பரப்பானது வவுனியா மன்னார் வீதியில் A30 (தேசப்படத்தில் வவுனியா பறையனாலங்குளம் வீதி என்றே காணப்படுகின்றபோதும் இப்பெயரானது பாவனையில் இல்லை) பம்பைமடுப் பகுதியில் சுமார் வவுனியா நகரத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் ஒதுக்கப்பட்டு விடுதியொன்றை நிர்மாணிக்கும் வேலைகள் தொடங்கியிள்ளபோதும் உள்நாட்டுப் பிரச்சினைகள் காரணமாக இங்கே வளாகத்தை மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே காணப்படுகின்றன.

பிரிவுகளும் கற்கைத் துறைகளும்

விவசாயப் பிரிவு
கலைப் பிரிவு
பொறியியற் பிரிவு
முகாமைத்துவம் மற்றும் வர்த்தகப் பிரிவு
மருத்துவப் பிரிவு
விஞ்ஞானப் பிரிவு

யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள்

இராமநாதன் நுண்கலைக் கல்லூரி

யாழ் வளாகத் தலைவர்கள்

பேராசிரியர் க. கைலாசபதி (ஆகஸ்ட் 1, 1974 - ஆகஸ்ட் 1977)
பேராசிரியர் சு. வித்தியானந்தன் (ஆகஸ்ட் 1977 - டிசம்பர் 1978)

யாழ் பல்கலைக்கழக உபவேந்தர்கள்

பேராசிரியர் சு. வித்தியானந்தன் (ஜனவரி 1, 1979 - ஜூன் 30, 1988)
பேராசிரியர் ஆ. துரைராஜா (செப்டம்பர் 1, 1988) - மார்ச் 31, 1994)
பேராசிரியர் கே. குணரத்தினம் (ஏப்ரல் 1, 1994 - ஜூன் 30, 1996)
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை (ஜனவரி 1, 1997) - ??)
பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்
பேராசிரியர் எஸ். குமாரவடிவேல்
மேராசிரியர் என். சண்முகலிங்கம்

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP