யாழ்ப்பாண மாநகரசபை

யாழ்ப்பாண மாநகரசபை என்பது யாழ்ப்பாண நகரத்தை நிர்வாகம் செய்துவரும் உள்ளூராட்சி அமைப்பு ஆகும். இது தற்போது யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியையும், நல்லூர் தொகுதியின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியுள்ளது.
இது வட்டாரம் என அழைக்கப்படும் 23 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் வெவ்வேறாக உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். பின்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கூடி நகரபிதா (Mayor), துணை நகரபிதா ஆகியோரைத் தெரிவு செய்வர். புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட பின்னர் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதி முழுவதிலும் விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். நகரபிதா, துணைநகரபிதா ஆகியோரையும் மக்களே நேரடியாகத் தெரிவு செய்கின்றனர்.

தோற்றம்

1861 ஆம் ஆண்டில் வீதிக் குழு (Road Committee) என அழைக்கப்பட்ட உள்ளூராட்சிச் சபையைப் போன்றதொரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. பின்னர், 1906 ஆம் ஆண்டில் மற்றும் 1898 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 13 ஆம் இலக்கச் சட்டவிதிகளுக்கு அமைய முதலாவது உள்ளூராட்சிச் சபை (Local Board) உருவானது. 1921 ஆம் ஆண்டில் இது, நகரப்பகுதிச் சபை (Urban District Council) ஆகவும், பின்னர் 1940 இல், நகரசபையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இது மாநகரசபை ஆனது.

மாநகரசபைக் கட்டிடம்

குடியேற்றவாதக் காலப் பாணியில் கட்டப்பட்ட யாழ்ப்பாண மாநகரசபைக்கான கட்டிடம், யாழ்ப்பாணக் கோட்டைக்கு அண்மையில் அமைந்திருந்தது. இங்கே சபை அலுவலகங்களுடன், நகரமண்டபமும் அமைக்கப்பட்டிருந்தது. 1980 களின் இறுதியில், கோட்டையைச் சுற்றி இடம்பெற்ற போர் நடவடிக்கைகளினால் இக் கட்டிடம் முற்றாகவே அழிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து மாநகரசபையின் அலுவலகம் நல்லூருக்குத் தற்காலிக இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. எல்லா வசதிகளும் அடங்கிய புதிய கட்டிடமொன்றைக் கட்டுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டதாயினும், நாட்டிலிருந்த குழப்ப நிலை காரணமாக இது நிறைவேறவில்லை.

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP