சார்லிசாப்ளின் கண்ணீராக கரைந்த பிதாமகன்


உலகசினிமா வரலாற்றில் நகைச்சுவை பாத்திரத்தின் பிதாமகன் யாரென்றால் அவர் சார்லி சாப்ளின் ஒருவரே. தன் இயல்பான நகைச்சுவைத் திறனால் பல் முளைக்காத குழந்தைகள் முதல், பல் விழுந்த பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சிரிக்க வைத்த, நகைச்சுவை உலகின் மன்னாதி மன்னன்
சார்லி சாப்ளின்
யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம் The great dictator. இந்த படத்தை ஹிட்லர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருந்தானாம்! 'சார்லி-ஹெட்டி'யின் காதல் கூட உருக்கமானது, உயவர்வானது...! தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ அம்மாவிற்கு, தன் கணவனை விட, பிள்ளைகளின் மீது உள்ள பாசம் வலுவானதாக இருக்கிறது.

Chaplinஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பாவுக்கு இரண்டாவது மகனாக சார்லி சாப்ளின் 1889 ஆம் ஆண்டு பிறந்தார். முழுப்பெயர் 'சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின்'. லண்டன் மதுவிடுதிகளில் பாடும் பெண் ஹென்னா தான் சார்லியின் அம்மா. இசைநிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம். இன்னொரு அப்பாவுக்கு பிறந்தவன் அண்ணன் ஸிட்னி. ஒரு நாள் மேடையில் பாடும்போது தொண்டையில் பிரச்னை; பாட முடியவில்லை! ஒரே கூச்சல்! அவமானம் கண்ணீராகக் கரைய மேடையை விட்டு கீழே இறங்கினாள், ஹென்னா. ஆறு வயது சிறுவன் சார்லி என்ன நினைத்தானோ மேடையேறினான். அது ஒரு மகா கலைஞனின் முதல் கலைப் பயணம் என்று யாருக்கும் தெரிந்திருக்காது! தன் அம்மா சொல்லிக் கொடுத்த பாடலைப் பாடி, தன் பிஞ்சு கால், கைகளை அசைத்து நடனமாடத் துவங்கினான். விசில், கைத்தட்டல் அரங்கமே அதிர்ந்தது! சில்லறைகள் சீறிப் பறந்தன. சில்லறைகளை பொறுக்கினான், சார்லி. பாடச் சொல்லி கூச்சலிட்டது கூட்டம்!

'சில்லறைகளை பொறுக்கிய பிறகுதான் பாடுவேன்; ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை என்னால் செய்ய முடியாது!' மீண்டும் கொல்லென்று எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்தது! தன் தாய் பாடமுடியாமல் தவித்ததை நடித்துக் காட்ட மீண்டும் காது கிழியும் சிரிப்பொலி... மேடைப்பாடல், துணி தைத்து கொடுப்பது என்று வந்த வருமானம் போதுமானதாக இல்லை! பசிக்கு முன்னால் மூவரும் தோற்றுப்போனார்கள். வேறு வழியில்லாமல் ஹென்னா சார்லியின் அப்பா மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தாள், தீர்ப்பு இழுத்தது. தன் பிள்ளைகள் இங்காவது வசதியாகப் படிக்கட்டும் என்று மூவரையும் அநாதை விடுதி ஒன்றில் சேர்த்தாள். தனித் தனியாக பிரிக்கப்பட்டார்கள். காலக்கொடுமை! அதனால்தானோ என்னவோ ஹென்னாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.

சார்லி, ஸிட்னியையும் சார்லியின் அப்பா தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்பா தன் இன்னொரு மனைவி லூஸி வீட்டுக்கு கூட்டிப்போனார். அங்கேயும் பசி சார்லி, சிட்னியையும் வீதிக்குத் துரத்தி சிரித்தது. 'அம்மா, அம்மா' என்று கதறி அழுதான் சார்லி. அங்கே அவனுக்கு அழுகையைத் தவிர ஆறுதல் சொல்ல யாரும் இல்லை! ஒரு நாள் வீட்டு வாசலில் அந்த அதிசயம் நடந்தது! அம்மா ஹென்னா வந்திருந்தாள்!! சார்லி, சிட்னி ஓடிப்போய் ஒட்டிக்கொண்டார்கள்! மீண்டும் மூன்று உயிர்களும் ஓர் உயிரானது.

சாப்ளின் அப்பாவிடம் இருந்து கொஞ்சம் பணம் வந்தது. பள்ளிப் படிப்பு தடையில்லாமல் தொடர்ந்தது. பள்ளிகளில் நடக்கும் நாடகம், நடனங்களில் தனக்கென்று ஒரு நல்ல பெயரை சார்லி சம்பாதிக்கத் தவறவில்லை! அவன் சார்ந்த நடன, நாடகக்குழு அமெரிக்காவிற்குப் போகும் சந்தர்ப்பம் வந்தது. அங்கு போன சாப்ளின் அமெரிக்க சுதந்திரதேவி சிலை நோக்கி தன்னை மறந்து கத்தினான் 'ஏய்! அமெரிக்காவே பத்திரமாக இரு! இன்னும் கொஞ்ச நாளில் உன்னை முழுவதுமாக கொள்ளையடிக்க இங்கே ஒருவன் வருவான் வந்து கொண்டிருக்கிறான்!' என்று. அடுத்த அய்ந்தாண்டுகளில் அதுதான் நடந்தது. உலகத்தையே கொள்ளையடித்தான், சாப்ளின்.

தன் முதல் காதலி ஹெட்டியை சார்லியின் ஏழ்மையைக் காட்டி பிரித்தான், அவளின் அண்ணன். அந்தத் தோல்வியை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவரை வாழ்நாள் முழுக்க சித்திரவதை செய்தது! பிற்பாடு அவர் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்ட எண்ணற்ற திருப்தியற்ற திருமண வாழ்க்கைகளுக்கும் அதுவே காரணமாக அமைந்தது. தன்னை துன்புறுத்தும் ஹெட்டியின் நினைவுகளில் இருந்து தப்பிக்க, பொய்யாக தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு... தீவிர வாசிப்பை மேற்கொண்டார். தனக்கான சிந்தனைகளை செதுக்கிக் கொண்ட கால கட்டம் அது! முதல் படம் newspaper reporter. ஒரு நாள் ஏதாவது நடித்துக்காட்டு என்று நடிக்க வாய்ப்புக் கேட்ட சார்லியை பார்த்துச் சொன்னார் சென்னட் என்னும் தயாரிப்பாளர். அவர் சைசுக்கு உடைகள் இல்லை என்பதால், பெரிய சைஸ் தொள தொள பேண்ட், பொருத்தமே இல்லா சிறிய மேல் சட்டை, ஷு, தொப்பி, கைத்தடி. இப்படித்தான் உருவானது சார்லி சாப்ளினின் உருவ முத்திரை!

இந்த உருவ முத்திரை பதித்த பொருட்கள் இன்றும் கூட விற்று தீர்ந்து கொண்டிருக்கும் அதிசயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது! அப்படியே மேடையேறி நடித்துக் காட்ட சிரிப்பால் மேடை அதிர்ந்து அடங்கியது! என்னிடம் கதை ஒன்று இருக்கிறது, நானே நடித்து நானே இயக்க விரும்புகிறேன் என்றார் சென்னடிடம் சார்லி. முதலில் ஒத்துக்கொள்ளாத சென்னட், மக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கை மனதில் கொண்டு ஒரு நிபந்தனை விதித்தார். "அந்த படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பு செலவு அனைத்தையும் வட்டியும் முதலுமாக நீங்கள் திருப்பித் தரவேண்டும் சம்மதமா?" என்று கேட்டார். அதற்கு சாப்ளின் சொன்னார் "முழுப்பணத்தையும் திருப்பித் தருவேன். அந்தப் படம் தோல்வியடைந்தால், நான் இந்த சினிமாவை விட்டே வெளியேறி விடுகிறேன்" என்று அப்படி இயக்கி வெளிவந்த முதல் வெற்றிப்படம் caught in the rain.

ஒரு முறை சாப்ளின் படப்பிடிப்பு முடிந்து நியூயார்க் நோக்கிப் போன தகவல் எப்படியோ தெரிய வர... மலர்கொத்துக்கள், பேண்டு வாத்தியங்கள், உயரமான கம்பம், மரங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம்! பசியும், அவமானங்களும் இதற்கு தானா? நம் வாழ்க்கை மனிதகுலம் பயனுறும் காவியமாக வேண்டாமா? யோசிக்க ஆரம்பித்தார். அமெரிக்காவிற்கு குடியேற வரும் மனிதர்களிடம் அரசு நடத்தும் கெடுபிடிகளை கடுமையாகச் சாடி the immigrant படம் வெளியானது. அமெரிக்க பிணந்தின்னும் கண் சார்லியை கண்காணிக்க உத்தரவு போட்டது, இப்படித்தான்! சார்லி ஏழைகளைப் பற்றியே படம் எடுத்ததால், பணக்காரர்கள் எதிரிகளானர்கள். வேறு வழியில்லாமல் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டியதாயிற்று!

இக்கால கட்டத்தில்தான் தன் காதலி ஹெட்டியைப் போலவே இருக்கிறாள் என்று மில்ட்ரெட் ஹாரிஸ் என்பவளை திருமணம் செய்து கொண்டார். ஆண் குழந்தை பிறந்து இறந்தது, அவன் நினைவாக தயாரான படந்தான் the kid. லிட்டா கிரே, பவுலட் கோடர்ட், ஊநா ஓ நீல் போன்றவர்கள் மேல் காதல் வயப்பட்டதும் காயப்பட்டதும் துன்பியல் வரலாறு! அவர்கள் அனைவரும் தோற்றத்தில் ஹெட்டியைப் போலவே இருந்தார்கள் என்பது இன்னொரு அதிசய தகவல்! புகழின் உச்சியில் இருந்த நேரம்.. "என்னை நினைவிருக்கிறதா? நான் தான் ஹெட்டி! நான் ஒரு முட்டாள், அபாக்கியசாலி. நீங்கள் எவ்வளவு உயரமானவர் என்பதை உங்கள் படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நீங்கள் லண்டன் வருவதாக இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். கடைசியாக உங்களின் கைகளைப் பிடித்து கதறி அழு வேண்டும். என் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்!" என்ற கடிதம் படித்து தான் பார்த்த எல்லா வேலைகளையும் ரத்து செய்தை விட்டு லண்டனுக்குப் பயணமானர் சாப்ளின்.

பஞ்சையாய், பராரியாய், பிச்சைக்காரனாய் துரத்தியடித்த அதே லண்டன் தெருக்கள் வெட்கமே இல்லாமல் விழாக்கோலம் பூண்டது சார்லியை வரவேற்க; வெறி பிடித்த மக்கள் வெள்ளம்! இந்த தடவையும் ஹெட்டி ஏமாற்றித் தான் போயிருந்தாள்! அவளின் மரணச்செய்தியைத் தான் கேடக முடிந்தது! அவளின் நினைவாக கொஞ்ச கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த சார்லி இந்த இடி செய்தி கேட்டு இன்னும் ஒரு முறை செத்துப் போனார்! கடவுளைப் போலவே காதலும் சரியாக புரிபடாமலேயே இந்த பூமியை ஆண்டு கொண்டுதான் இருக்கிறது! ஓவென கதறி அழக்கூட முடியவில்லை. அவ்வளவு மக்கள் வெள்ளம்! நடு இரவில் முகத்தை மப்ளர் கொண்டு மூடி, பசியால் கதறி அழுது சுற்றி அலைந்து திரிந்த வீதிகளுக்கு மீண்டும் ஒருமுறைப் போய் மவுனமாக அழுது விட்டு வந்தான், அந்த மகா கலைஞன்! கூடவே தன் தாயின் மரணமும் சுனாமியாக வந்து தாக்கியது, "இந்த தோற்கும் அன்பு அவளுடையது! அவளது தியாகம், திறமைகள், அவள் பட்ட வேதனைகளுக்கு முன்னால் நானும் என் படங்களும் அவளின் கால் தூசுக்குச் சமம்!" என்று சாப்ளின் நெஞ்சு வெடிக்க கதறி அழதார்!

சினிமா பேச தொடங்கிய போதும் கூட பேசாத படங்களையே எடுத்தார்! தான் எடுக்கும் பேசாத படம் மக்களைப் பேச வைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு எடுக்கப்பட்ட படந்தான் city lights. எதிரிகள் சதி செய்ததால் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் திரையிடப்பட்டு கட்டுக்கடங்கா கூட்டத்தைக் கூட்டி எதிரிகளை பணிய வைத்த படம்! இந்தியாவிலிருந்து வரும் காந்தியைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்தார்! உலகம் இயந்திரமாகி வருவதையும், மனித பண்புகள் நசுக்கப்படுவது பற்றியும் சாடி வந்த modern times வெளி வந்த பிறகு மனித குலத்தை மேம்படுத்த வந்தவனை சரியாகத் தான் அடையாளப்படுத்தியது அல்ப புத்தி அமெரிக்க அரசு "கம்யூனிஸ்ட்!" என்று. அமெரிக்க அரசு லண்டனுக்குப் புறப்பட்ட சார்லியிடம் தெரிவித்து, "உங்கள் சொத்து பறிமுதல் செய்யப்படுகிறது. அமெரிக்காவில் காலடி வைத்தால் கைது செய்யப்படுவீர்கள்!" ஸ்விட்சர்லாந்து குடிபெயர்ந்து அங்கும் இரண்டு படங்களை இயக்கினார். 1972 ஆம் வருடம் கலையுலகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவப்படுத்தியது! 1977இல் ஒரு கிறிஸ்துமஸ் நாளில்.... எல்லோரையும் கண்ணீர் வர சிரிக்க வைத்த அந்த மகா கலைஞனின் மரணம் முதன்முறையாக அழவைத்தது! 



Part -2

உலகசினிமா வரலாற்றில் நகைச்சுவை பாத்திரத்தின் பிதாமகன் யாரென்றால் அவர் சார்லி சாப்ளின் ஒருவரே. தன் இயல்பான நகைச்சுவைத் திறனால் பல் முளைக்காத குழந்தைகள் முதல், பல் விழுந்த பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சிரிக்க வைத்த, நகைச்சுவை உலகின் மன்னாதி மன்னன் சார்லி சாப்ளின்.
குட்டைத் தொப்பியும், குறு மீசையும், ஒரு கைத்தடியுமே இவரது பிரதான அடையாளங்கள். அவர் திரையில் தோன்றி, நடக்க ஆரம்பித்தால் சிரிக்கத் தெரியாத மனிதன் கூட தன்னை மறந்து சிரித்துவிடுவான் என்பது உலகம் கண்ட உண்மை. சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் மிகப்புகழ் பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல பரிணாமங்கள் உண்டு.


இன்று அவரது 122வது பிறந்தநாள் விழாவாகும். இந்நாளில் சாப்ளினைப் பற்றிய சில தகவல்களை கண்ணீரோடு உங்களோடு பகிர்ந்து கொள்கிறது உங்கள் பிலிமிக்ஸ் இணையதளம்.
சாப்ளின், லண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹென்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாக, 1889 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ம் தேதி இரவு 8 மணிக்குப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் "மியூசிக் ஹால்" கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்தே இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது.
குடிகாரத் தந்தை தனது தாயை விட்டு சென்றுவிடவே தாயின் நிழலில் வாழும் மகனாக ஆனார். மது விடுதியில் பாடுவதே அவரது தாயின் தொழில்.அதுவும் காலப்போக்கில் அவளை கைவிட்டது. அவரது தாய் தொண்டை கட்டி பாடமுடியாமல் அவமானப்பட்டுக் கொண்டு நிற்கையில் யாருமே எதிர்பார்த்திராத வண்ணம் மேடை ஏறிய சாப்ளினின் வினோத நடனம் போதையில் இருந்தவர்களையும் விசில் அடிக்க வைத்தது. அப்போது சாப்ளினுக்கு வயது ஆறு.


ஒரு காலகட்டத்தில் தாயும் சாப்ளினை விட்டுப் பிரிந்து விடவே, அவரது அண்ணன் சிட்னியுடன் வாழ்ந்தார். சாப்ளின், சிட்னி இருவருக்கும் தாய் ஒன்றே தவிர தந்தையர் வேறானவர்கள். ஆனாலும் அவர் சாப்ளினுக்கு இறுதி வரை தாயாகவே இருந்தார்.பிள்ளைகளை பிரிந்த அந்த தாய் ஹென்னா பைத்தியமாக மாறினார். அவரது தந்தையோட வாழமுற்பட்டபோது அங்கே அந்நியர் போல் நடத்தப்பட்டார் சாப்ளின் (சித்தி கொடுமை)


சாப்ளினுக்கு பத்து வயது இருந்த பொழுது, இவரது அண்ணனான சிட்னி லண்டன் ஹிப்போட்ரோமில் "சின்ட்ரெல்லா " பாண்டோமைமில் ஒரு பூனையாக(நகைச்சுவைக் கதாப்பாத்திரம்) நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார். அதன் பிறகு சினிமாவில் நுழைந்தார் சாப்ளின். இவரது திறமையை தயாரிப்பாளர் மாக் செனட் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் (Keystone Film Company) சேர்த்துக் கொண்டார்.
1917-ல் ஒரு மில்லியன் ஊதியம் பெற்ற உலகின் முதல் நடிகர் என்ற பெருமையைப் பெற்றார். சினிமாவில் பலவீனனாக இருந்தாலும் புத்திசாலித்தனமான கோமாளித்தனத்தால் பலவானை ஜெயித்து விடுவார் சாப்ளின். அவர் திரையில் எப்படி தனது குள்ள உருவத்தோடு பலவான்களோடு போரிட்டாரோ அதே போன்று நிஜத்திலும் அமெரிக்கா அரசாங்கத்தின் முதலாளித்துவ கருத்தை திரை மூலம் சாடினார். இதனால் சாப்ளினை கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்திய அமெரிக்கா அரசாங்கம் அவரை நாடு கடத்தியது.
தி சர்க்கஸ், தி சிட்டி லைட்ஸ் ஆகிய படங்கள் சாப்ளினை புகழின் உச்சிக்கே கொண்டு சென்ற படங்களாகும். ஹிட்லரின் வாழ்நாளிலேயே, ஹிட்லர் உலகையே மிரட்டிக்கொண்டிருந்த காலத்திலேயே அவரை கேலி செய்து ஒரு படமே எடுத்தார் சாப்ளின்.அந்த படத்தின் பெயர் 'தி கிரேட் டிக்டேட்டர்'. சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இரு முறைப் பார்த்தார்.
திருமண வாழ்க்கை: தனது 28 வயதில் 16 வயது மில்ரெட் ஹரிஸ் , 34 வயதில் 15 வயது லிட்டா கிரே, 46 வயதில் 16 வயது பவுலட் கொடார்ட் என தொடர் திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றுக் கொண்டார்.கடைசியாக ஓனா ஓ'நீலை சந்தித்தார். இவரை ஜூன் 16, 1943 அன்று மணந்தார். சாப்ளினின் வயது அப்பொழுது 54, ஓ'நீலின் வயது 17. இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தனர்.
1922-ல் தி சர்க்கஸ், த ஜாஸ் சிங்கர் ஆகிய படங்களுக்காக ஆஸ்கரின் சிறப்பு விருதுகளைப் பெற்றார். 1972 ம் ஆண்டு தன் 82வது வயதில் தள்ளாடி வந்து வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார். 1977ல் ஒரு கிருஸ்துமஸ் தினத்தில் உலக மக்களின் கண்ணீராக பூமியில் கரைந்தார்.
சில சுவாரசியத் தகவல்கள்
சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும் பொழுது பெரிதும் வியப்புற்றனர். சாப்ளின் நல்ல சதுரங்க ஆட்டக்காரர் ஆவார்.


சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் நிறைய அளவில் நடத்தப் பட்டு வந்தன. சாப்ளின் ஒரு முறை அப்போட்டி ஒன்றில் ரகசியமாகப் பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது!
உலகின் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் “என்னைப் போன்ற விஞ்ஞானிகளை விட சாப்ளினே உயந்தவர்” என பகிரங்கமாக பத்திரிகைக்கு பேட்டியளித்திருக்கிறார்.
சாப்ளின் "ஹாலிவுட் வாக் ஆ·ப் ·பேமில்"(HollyWood Walk Of Fame) -இல் இடம் பெற்றார்.1985 இங்கிலாந்த் அரசு, இவரது உருவத்தை அஞ்சல் தலை ஒன்றில் வெளியிட்டு கௌரவித்தது. 1994 ஆம் ஆண்டு அமெரிக்க அஞ்சல் தலை ஒன்றிலும் இடம் பெற்றார்.
1992 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை "சாப்ளின்" என்ற திரைப்படமாக்கப் பெற்றது. இதனை இயக்கியவர் ஆஸ்கர் விருது பெற்ற சர்.ரிச்சர்ட் அட்டன்பரோ.
உலகத்தில் உள்ள கடலை சிறு கமண்டலத்தில் அடக்கிவிட முடியாது. அதுபோலத்தான் சாப்ளினின் புகழும்... இங்கு கொடுத்திருப்பது அதில் சிறு துளியே..!

part -3
இந்த பாடல்வரிகளை கேட்டிருந்தாலும் இதன் பின்னணி பலருக்கும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். ‘எந்தப்பாடல் வரி?’ என்பவர்களுக்கு. ‘தில்’ படத்துல வருமே… வேண்டும் வேண்டும் தீயைத்தீண்டும் தில் அந்தப் பாடலின் வரிதான்.

சார்லி சாப்ளின் நமெக்கெல்லாம் அறிமுகமானவர். அவரின் திரைப்படங்களை கண்டிராதவர்களுக்கும் அவர் அறிமுகமாகியிருப்பார், எதாவது ஒர் விதத்தில். அவரது கோமாளித்தனமான (சாப்ளின் தனமான என்றும் வாசிக்கலாம்) படங்களிலெல்லாம் ‘வலியவனை எளியவனால் வெல்லமுடியும்’ என்கிற ஒரே கருதான். 

ஏழ்மையும், வறுமையும்தான் இவரின் சுவாரஸ்யமான நகைச்சுவை படங்களுக்கு பின்னணி என்பது நகைமுரண்(Irony). 

ஹிட்லர் ஆயிரக்கணக்கில் யூதர்களை கொன்று குவித்து தன்னை கொடுங்கோலனாக நிறுவிவிட்டிருந்த காலகட்டத்தில்(1940), சாப்ளின் ‘The Great Dictator’ (அந்த சிறந்த சர்வாதிகாரி)என்ற படம் ஒன்றை எடுத்தார். படத்தில் ஹிட்லரை ஒரு மனநோயாளிபோல சித்தரித்திருந்தார்.

சாப்ளினின் மற்ற குறும்படங்களைப்போலல்லாமல் இது இரண்டுமணி நேரம் ஓடுகிறது. படத்தில் நீண்டதொரு கதை. வெறும் காமெடி மட்டுமல்லாது உள்ளோடும் ஒரு சற்றே இறுக்கமான (காதல்) கதையும் ஓடுகிறது,கொஞ்சம் மெதுவாகவும் செல்கிறது இந்தப்படம். 

இந்தப்படத்தில் சாப்ளின் ரெட்டை வேடம் போடுகிறார். ஒருவர் சர்வாதிகாரி இன்னொருவர் சாதாரண சிகை திருத்துபவர்(Barber), யூதர்.

சிகை அலங்கரிப்பவர் வாழும் (யூத) சேரிக்கும் ஹிட்லரின் அரண்மனைக்குமாய் மாறி மாறி செல்கிறது கதை.
சர்வாதிகாரியாக சாப்ளின் செய்யும் எதுவும் சிரிக்க வைக்கும். ஹிட்லரை மன நோயாளிபோல காண்பிக்கும் சில காட்சிகள் கேலி என்பதைவிட கடுமையான விமர்சனமாகவே காணப்படுகிறது.

ஒரு காட்சியில் ஹிட்லர் ஒரு அலமாரியைத்திறக்கிறார் அதில் பல விதங்களில் முகம்பார்க்கும் கண்ணாடிகள் அதில் முகத்தை சரி செய்கிறார். சில நேரம் குழந்தைபோல சிரித்துக்கொண்டே அறையிலுள்ள திரைச்சீலையில் ஏறுகிறார். கீழிறங்கி வந்து உலகப் பந்தை கையில் எடுத்து பலூனைத் தட்டி விளையாடுவதுபோல நடனமாடுகிறார். இதில் சாப்ளினின் நடிப்பு அபாரம்.


படத்தின் இறுதியில் ஹிட்லரைப் போலவே இருக்கும் சிகை அலங்கரிப்பவர் ஆள்மாறாட்டத்தினால் சர்வாதிகாரிக்குப்பதிலாக ஜெர்மனி படைவீரர்களுக்கு ஒரு உரை ஆற்றுகிறார். ஹிட்லரின் கருத்துக்களுக்கு நேரெதிரான கருத்துக்களை அந்த உரையில் வைக்கிறார், பின்பு தன் காதலியிடம் சேருகிறார். சுபம்.
ஹிட்லரின் வாழ்நாளிலேயே, ஹிட்லர் உலகையே மிரட்டிக்கொண்டிருந்த காலத்திலேயே அவரை கேலி செய்து ஒரு படமே எடுத்தைத்தான் ‘ஹிட்லர் காலத்தில்..சார்லி சாப்ளின் தில்’ என்கிறார் நம் கவிஞர். 

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP