யாழ்ப்பாணம்



யாழ்ப்பாணம் என்பது இன்றைய நிலையில் யாழ்ப்பாணத் தீபகற்பத்தையும், அங்குள்ள தீவுகளையும் குறிக்கும். யாழ்ப்பாணத்தில் 14ஆம் நூற்றாண்டு முதல் ஓர் அரச அமைப்பு நிலவியது. அது போர்த்துக்கேயர் வருகை வரை நிகழ்ந்தது (1520).

ஒல்லாந்தர் காலம் முதல் அதன் பொருளாதார நிலைப்பட்ட நிர்வாக, நடவடிக்கைகள், அப்பிரதேசத்துக்குரிய "தேச வழமை" முறைப்படியே நடைபெற்றது. இதனால் யாழ்ப்பாணச் சமூகத்தின் தனித்துவம் தொடர்ந்து பேணப்படுவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் மிஷனரிமார்களின் நடவடிக்கைகள் இங்கு குறுகிக் காணப்பட்டன. இதனால் காலனித்துவ ஆட்சிக்கு வேண்டிய இடைநிலை உத்தியோகங்களில் யாழ்ப்பாணத் தமிழர்கள் நிறைய இடம்பெற்றனர். இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூற்றில், இந்நிலைமை யாழ்ப்பாணத்தவர்களுக்கெதிரான சமூக, அரசியல் கோரிக்கைகள் வைக்கப்படுவதற்கும் காரணமாயிற்று.

யாழ்ப்பாணச் சமூகம் காலனித்துவத்தை எதிர்நோக்கிய முறையில் முதலில் சமூக மேலாண்மையுடைய மட்டத்தினர் தங்கள் பாரம்பரியத் தொடர்ச்சிக்கும் பேணுகைக்கும் வேண்டிய அதிகாரத்தினை, சைவக் கருத்து நிலை வழியாக ஏற்படுத்திக் கொண்டனர். இந்தக் கருத்து நிலை மேலாண்மை, யாழ்ப்பாணத்தின் சமூக வேறுபாடுகளை முதன்மையிழக்கச் செய்து, யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய ஓர் ஒருமைப்பாடான கருத்தினை முன்னிலைப்படுத்திற்று.

இந்த மதநிலைப் பேணுகை ஒரு புறத்தில் தொழிற்பட இன்னொரு புறத்தில் ஆங்கிலக் கல்வி வழியாக வந்த ஒரு தாராண்மைவாதப்போக்கும் தொழிற்பட்டது. யாழ்ப்பாண மாணவர் காங்கிரசையும், அதன் தோல்வியின் பின்னர் வந்த மார்க்சீயச் சிந்தனைப்போக்கையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட அரசியல், சமூகப் பாரம்பரியங்கள காரணமாக, யாழ்ப்பாணமே இலங்கைத் தமிழர்களை சின்னப்படுத்தியும் (Symbolising), பிரதிநிதித்துவப்படுத்தியும் நிற்கின்ற ஒரு நிலை ஏற்பட்டது. இதனால் இலங்கைத் தமிழர்களின் அரசியற் பிரக்ஞை வளர்ச்சியில் யாழ்ப்பாணம் நீண்டகாலம் முக்கியத்துவம் பெற்று விளங்கியது.

இந்த "முதன்மைகள்" காரணமாக, யாழ்ப்பாணத் தமிழர், மற்றைய தமிழ்ப் பிரதேசங்களில் எதிர்க்கப்படுவதற்கான ஒரு சூழலும் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிலவியது உண்மையே.

சைவக் கருத்து நிலை காரணமாக யாழ்ப்பாணத்திற் சமூக அடுக்கமைவு உணர்வு வலிமையுடன் போற்றப்பட்டு வந்ததெனினும், சாதிமுறைமைக் கெதிரான போராட்டங்களும் அங்கு நிலவின.

கத்தோலிக்க புரட்டஸ்தாந்தவர்களும், முஸ்லிம்களும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்துள்ளனர்.

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP