Showing posts with label பிரித்தானியர் ஆட்சி. Show all posts
Showing posts with label பிரித்தானியர் ஆட்சி. Show all posts

திருக்கரைசைப் புராணம்



திருக்கரைசைப் புராணம் என்ற நூல் “கரைசை” எனும் பதியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் புகழை விரித்துக் கூறுவதொன்றாகும். இப்பதி திருகோணமலைப் பகுதியில் மகாவலி கங்கைக் கரையோரத்திலே அமைந்துள்ளது. கரைசையம்பதியை அகத்தியதாபனம் எனவும் வழங்குவர். அகத்திய முனிவரே இதனைத் தாபித்தார் என்று இந்நூல் கூறும். இப்புராணம் சூதமுனியருளிச்செய்த வடமொழிப்புராணத்தினை தழுவிச்செய்யப்பட்டது என இப்புராணத்தின் வரலாறு கூறும் பகுதியில் கூறப்பட்ட போதும், தழுவப்பட்ட முதல்நூலின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்நூல் செய்த புலவர் பெயர் தெரியாததாகையால், அவர் செய்த நூற்பெயர் கொண்டு, அவரைக் கரைசைப் புலவர் என்ற காரணப்பெயராலழைப்பர். எனினும், நூலகச் சான்று கொண்டு அவர் ஈசானச் சிவனைக் குருவாகக்கொண்டவரென்றும், “கொற்றங்குடி வாழும் பிரான் சரவணத்துறுதி” கொண்டவர் என்றும் தெரிகின்றது. இவற்றிற்காதாரமாக அந்நூற் குருவணக்கமாய
அண்டர்பிரா னடமாடுந் தில்லைமணி
மன்றதனி லகலா தென்றும்
விண்டசிவ சித்தாந்த வேதாந்தப்
பொருள்விளக்கும் விளக்க மாகித்
தொண்டறியா நாயேனுக் கருள்புரிந்து
கிளைமுழுதுந் தொழும்பு கொண்ட
எண்டகுசீ ரீசானச் சிவன்மலர்த்தாண்
மறவாதென் னிதயந் தானே
என்ற செய்யுளையும்
அதன் புராண வரலாறு கூறும் செய்யுள்களில்,
வண்ணமலி வடகலைக் கொடுமுடியாந்
தென்கலை மணியார் தன்மைத்
தண்ணமரு மலரிட்டுத் தாடொழுவான்
பொருட்டங்ஙன் சாராநின்ற
கண்ணகலுங் கலைஞானத் தெளிவனைத்துங்
கைவந்த கலச யோனி
அண்ணலுமுத் தரமுகமே யாக்கியமா
வலிகங்கை யாடும் போதில்
ஆங்கொருபே ரற்புதமா வசரீரி
வாசகத்தா லண்ண லார்தம்
பாங்கமருந் தென்மலயம் பயின்றதமிழ்க்
குறுமுனிவ பயிலு கின்ற
வீங்கமரு மிக்கங்கை யிரும்பெருமை
யியல்பிவையா மிங்ங னீயு
மோங்கநம்மைத் தாபனஞ்செய் திடுதியென
வுவனறிய வுரைத்திட் டாரால்
அக்கணமே தாபனஞ்செய் தவ்விறைக்குச்
சூதமுனி யருளிச் செய்த
மிக்கதிரும் வடபாடைப் புராணத்தைத்
தென்கலையின் விருத்தப் பாவாற்
றிக்கிசைய வருந்தொண்டர் செய்தியென
வென்னறிவுஞ் சிறிது சேர்த்தி
ஒக்கவுரைத் தனன்கொற்றங் குடிவாழும்
பிரான்சரணத் துறுதி கொண்டே
ஆகிய விருத்தங்களைக் காட்டலாம்.
இவர் காலத்தை உறுதியாக கூறக்கூடிய சான்றுகள் ஏதும் இப்போது இல்லை. இப்புராணத்தை வே. அகிலேசபிள்ளை என்பார் 1893இலே பதிப்பத்து வெளியிட்டார்.
இந்நூலின்கண் கடவுள் வாழ்த்து, குருவணக்கம், புராண வரலாறு, அவையடக்கம் ஆகியன கொண்ட பாயிரப்பகுதிகளை விட இலங்கைச் சருக்கம், கங்கைச் சருக்கம், தாபனச் சருக்கம், பூசைச் சருக்கம் ஆகிய நான்கு சருக்கங்களுள. இதனை ஒரு தலபுராணம் என்றே கொள்ளத்தகும்.

Read more...

யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி

1796 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி ஆரம்பமானது. 1796 ஆம் ஆண்டிலிருந்து 1948 ல் யாழ்ப்பாணத்தையும் இலங்கையின் ஒரு பகுதியாக விட்டுச் செல்லும் வரை இவ்வாட்சி நீடித்தது.

இலங்கைத் தீவில் பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பம்

1782 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும், ஒல்லாந்து நாட்டுக்கும் இடையில் போர் மூண்டது. இதனத் தொடர்ந்து சென்னையை நிர்வகித்துவந்த பிரித்தானியத் தேசாதிபதி இலங்கைத் தீவில் உள்ள ஒல்லாந்தர் பகுதிகளைக் கைப்பற்றப் படைகளை அனுப்பினான். அப்படை திருகோணமலையில் இறங்கி அதனைக் கைப்பற்றியது எனினும், அடுத்த ஆண்டில் இங்கிலாந்தும், ஒல்லாந்தும் சமாதானம் செய்து கொண்டமையால் திருகோணமலையைத் திருப்பிக் கொடுக்கவேண்டியதாயிற்று. 1795 ல் மீண்டும் இரு நாடுகளுக்குமிடையே போர் வெடிக்கவே, சென்னையிலிருந்து சென்ற பிரித்தானியப் படைகள் மீண்டும் திருகோணமலையைக் கைப்பற்றியதுடன், பருத்தித்துறையில் இறங்கி எவ்வித எதிர்ப்புமின்றி யாழ்ப்பாணக் கோட்டையையும் கைப்பற்றிக் கொண்டன. இவ்வாறே நீர்கொழும்பு, கொழும்பு, காலி என ஒவ்வொரு நகரமாய் வீழ்ச்சியடைய இலங்கையிலிருந்த ஒல்லாந்தரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள் அனைத்தும் 1776 பெப்ரவரியளவில் பிரித்தானியர் வசமாயின.
ஆரம்பத்தில் இப்பகுதிகளை நேரடியாக இங்கிலாந்தின் ஆட்சியின் கீழ் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டதாயினும், பல காரணங்களை முன்னிட்டு சென்னையுடன் சேர்த்து ஆட்சிசெய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த ஒழுங்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1798 ல் இலங்கையிலிருந்த பிரித்தானியர் ஆட்சிப் பகுதிகள் இங்கிலாந்து அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இங்கிலாந்து அரசின் பிரதிநிதியாக தேசாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் கொழும்பில் இருந்து நிர்வாகம் நடத்தினார்.

யாழ்ப்பாண நிர்வாகம்

தேசாதிபதிகளே யாழ்ப்பாணத்தின் நிர்வாகத்துக்கும் பொறுப்பாக இருந்துவந்தனர். இவர்கள் இலங்கையை 5 மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத்தையும் ஒரு அரசப் பிரதிநிதியின் (Government Agent) நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவந்தார்கள். ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்துத் தொடர்புகள் பலமாக இருக்கவில்லையாதலால் சில அரசப் பிரதிநிதிகள் ஒரு அரசனைப் போலவே நிர்வாகம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP