Showing posts with label நூல். Show all posts
Showing posts with label நூல். Show all posts
ஞானப் பள்ளு
ஞானப் பள்ளு என்ற இலக்கியம் போர்த்துக்கேயர் காலத்தே எழுந்த இலக்கியங்களில் ஒன்றாகும். இதன் பெயர் ஞானப் பள்ளு என்பதனை
ஆதி கத்தன்தி ருவேத மாகிய
அருப ஞானத்தை யும்புவி மீதிலே
நீதி யுற்றசொ ரூபம தாகிய
நீண்ட ஞானநி றைந்தபள் ளோதிட
அருப ஞானத்தை யும்புவி மீதிலே
நீதி யுற்றசொ ரூபம தாகிய
நீண்ட ஞானநி றைந்தபள் ளோதிட
Labels:
ஞானப் பள்ளு,
நூல்,
யாழ்,
யாழ்ப்பாணம
இந்து சாதனம்
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினராலே 1889ம் ஆண்டு புரட்டாதி மாதம் சைவம் வளர்க்கவென ஆரம்பிக்கப்பட்டு மாதம் இருதடவை வெளியிடப்பட்ட பத்திரிகையே இந்துசாதனம் ஆகும். இது இரு மொழிகளில் வெளியிடப்பட்டதோடு இன்னமும் சைவபரிபாலன சபையினராலே வெளியிடப்பட்டு வருகின்றது.
சிறந்த கணிதமேதையும் தமிழ் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்றிருந்தவரும் சைவபரிபாலன சபையின் தலைவருமான செல்லப்பாபிள்ளை அவர்கள் இதன் ஆங்கில பக்கங்களுக்கு ஆசிரியராயும், சைவம் வளர்த்த ஆறுமுக நாவலர் அவர்களின் மருமகரான கைலாசபிள்ளை அவர்கள் தமிழ் பக்கங்களுக்கு ஆசிரியராயும் இந்து சாதனம் பத்திரிகையின் முகாமையாளராயும் இருந்து பணமேதும் பெறாமல் பணிபுரிந்து இந்து சாதனம் பத்திரிகையை ஆரம்பித்தார்கள். செல்லாப்பாபிள்ளை அவர்கள் மோசமான உடல்நிலை காரணமாக 1891இலிருந்து பத்திரிகைப்பணியை இடைநிறுத்திக்கொண்டார்கள். இருந்தபோதும் 1902இல் அவர் சிவனடி சேரும்வரை சைவபரிபாலன சபையின் தலைவராயிருந்து அரும்பணி செய்தார்கள்.
இந்து சாதனம் தொடர்ந்தும் வெளிவரவேண்டும் என்ற ஆர்வம் கொண்ட நாகலிங்கம் அவர்கள், கதிரவேலு அவர்கள் மற்றும் சபாபதி ஆகியோர் ஆசிரியர் குழுவில் தன்னார்வோடு இணைந்து செயல்பட ஆரம்பித்தார்கள். இந்து சாதனம் பத்திரிகையை ஆரம்பித்தவர்கள் அதற்கு ஒரு பலமான அடித்தளமிட்டு கொடுத்ததோடு அவர்களை தொடர்ந்து வந்த சைவபரிபாலனசபையின் செயலாளராயிருந்த காசிப்பிள்ளை அவர்களும், சபையின் பொருளாளராயிருந்த பசுபதிச்செட்டியாரும் பத்திரிகை தொடர்ந்தும் வெற்றிகரமாக வெளிவர உறுதுணையாயிருந்தனர்.
இப்பத்திரிகை 1899இல் ஆங்கிலம் தமிழ் என இரு பத்திரிகைகளாக்கப்பட்டு ஆங்கில பதிப்பு ஒவ்வோர் கிழமையும், பெரிய அளவிலான தமிழ்ப்பதிப்பு மாதமிரு தடவையாகவும் வெளியிடப்படத்தொடங்கியது. தமிழ்ப்பதிப்பும் 1913ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் கிழமையும் வெளியிடப்பட்டது.
இன்று சைவபரிபாலன சபையினராலே இந்து சாதனம் ஒரு மாதாந்த சஞ்சிகையாக வெளியிடப்பட்டு வருகின்றது
Labels:
இந்து சாதனம்,
நூல்,
யாழ்,
யாழ்ப்பாணம
செகராசசேகரம்
செகராசசேகரம் என்ற வைத்திய நூல் செகராசசேகர வைத்தியம் என்றும் வழங்கும். இதனாசிரியர் யாரென்பது தெரியவில்லை. இது ஆயுள்வேத வைத்திய முறையைத் தழுவிச்செய்யப்பட்டுள்ளதென்பது,
மணிதங்கு வரையு ளாதி
மன்னுயிர் படைத்த போது
பிணிதங்கு வகையு நோயின்
பேருடன் குணமுங் காட்டி
அணிதங்கு மருந்துங் காட்டு
மாயிரு வேதந் தன்னைக்
கணிதங்கு வகையால் வேதங்
கடந்தமா முனிவன் செய்தான்.
என்ற செகராசசேகர ஆரம்பச் செய்யுளாற் றெரிகின்றது. மேலும் ‘வேதங் கடந்த மாமுனிவன்’ செய்த ஆயுள்வேத நூலில் இருந்து சிலவற்றை தேர்ந்தெடுத்து அந்தாதித் தொடைபெற்ற விருத்தமாக இதனாசிரியன் இதனைச் செய்தானென்பதும், அவற்றைக் கொய்தெடுத்த ஒழுங்கிலேயே இதனைக் கோத்தானென்பதும்,
செய்தவர் தனது நூலும்
தேர்ந்தோர் தெரிப்பும் பார்க்கிற்
பொய்தவம் பயர்ந்த பௌவம்
போலுமிங் கிதனை யாய்ந்து
வெய்தவ நோய்கள் தீர்
விருத்தவந் தாதி யாகக்
கொய்தவ வொழுங்கி லேதான்
கோப்புற செப்ப லுற்றாம்.
என்ற இந்நூற்செய்யுள் காட்டி நிற்கும். அச்சில் வந்த ‘செகராசசேகர வைத்தியம்’ என்ற நூல் பெரும்பாலும் இவற்றுக்கமையவே இருப்பினும், பற்பலவிடங்களிலும் அந்தாதித் தொடையற்றிருத்தலைக் காணலாம். இதனால் அச்சேறிய இந்நூற் பிரதிகளிற் பல செய்யுள்கள் தவர்க்கப்பட்டுள்ளன என்றே கொள்ளவேண்டியுள்ளது. இந் நூலிற் சில செய்யுள்கள் செகராசசேகரன் புகழ் கூறும். அங்காதிபாதம் பற்றிய செய்யுளில்,
செயம்பெறு சிங்கை நாடன் செகராச சேக ரன்றான்
என்றும், முகவாத சன்னிக்கு மருந்து கூறும் செய்யுளில்,
செகராச சேகர னெனும்
சிங்கையா ரியனையெதி ரொண்ணார்க ளென்னவே
திசைகெட் டகன்று விடுமே
என்றுஞ் சிங்கைச் செகராச சேகரன் புகழ் பேசப்படுவதை காணலாம். எனவே இந்நூல் ஒரு சிங்கைச் செகராசசேகரன் ஆட்சிக்காலத்திற் செய்யப்பட்டதென்று மட்டுமே கூறக்கூடியதாயிருக்கின்றது.
இந்நூலிலே வியாதிவரும்வகை, அங்காதி பாதம், சலமலப்பகுப்பு, உணவு வகை, நாடிவிதி, சுரவிதி மருந்தும் குணமும், சன்னிவிதி, சன்னி பதின்மூன்றின் குணமும் மருந்தும், மூலவியாதியின் மருந்தும் குணமும், விக்கலின் குணமும் மருந்தும், விக்கற் சிலேட்டுமக் குணமும் மருந்தும், சுவாதம் பத்தின் குணமும் மருந்தும், வாதத்தின் குணமும் மருந்தும், கசரோகக் குணமும் மருந்தும், காசம், குட்டரோகம், கரப்பனின் குணமும் மருந்தும், வலியின் குணமும் மருந்தும், உதரரோகங்கள், உட்குத்துப் பிறவீச்சுக் குணமும் மருந்தும், நீரிழிவின் குணமும் மருந்தும், முதுகுப்பிளவையின் குணமும் மருந்தும், பித்தம் 42இன் குணமும் மருந்தும் கூறப்பட்டுள்ளன.
செகராசசேகரம் என்கின்ற இந்த வைத்திய நூல் பற்றிய குறிப்பு கலாநிதி க. செ. நடராசா அவர்களால் எழுதப்பெற்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் 1982 இல் வெளியிடப்பெற்ற ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி எனும் நூலில் இருந்து எடுக்கப்பெற்றது. மேலதிகமாக கலாநிதி .சி. க. சிற்றம்பலம் அவர்களால் பதிப்பக்கப்பெற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினூடாக 1992 இல் வெளியிடப்பெற்ற யாழ்ப்பாண இராச்சியம் என்கின்ற நூலும் உசாத்துணையாகக் கொள்ளப்பெற்றது
Labels:
செகராசசேகரம்,
நூல்,
யாழ்,
யாழ்ப்பாணம
செகராசசேகரமாலை
சிங்கைச் செகராசசேகரனாற் செய்விக்கப்பட்டதெனக் கருதப்படும் செகராசசேகரமாலை என்ற சோதிட நூல், மகளிர்வினைப்படலம், மைந்தர்வினைப் படலம், வேந்தர் வினைப்படலம், கோசரப் படலம், யாத்திரைப்படலம், மனைவினைப்படலம், என்ற ஒன்பது படலங்களைக்கொண்டு விளங்கும். இந்நூல் இயற்றி அரங்கேற்றப்பட்ட காலத்தைக் குறிக்குஞ் செய்யுள் எதுவும் நூலகத்தே காணப்படாததால், இதன் காலத்தை, இதனை இயற்றுவித்த செகராசசேகர மன்னன் காலத்தைக்கொண்டே நிச்சயிக்கலாம்.
இதன் சிறப்புப்பாயிர இறுதி இரு செய்யுள்கள்,
கந்தமலை யாரியர்கோன் செகராச சேகரமன்
கங்கை நாடன்
என்றும்,
தன்கடவுட் சுருதிகளின் மனமெனுஞ்சோ
திடமதனைத் தலத்தின் மீது
மின்குலவு தென்கலையாற் றருகவென
வருள்புரிய விருத்தப் பாவாற்
பொன்குலவு செகராச சேகரமா
லையச்செய்தான் போருந்து மேன்மைத்
தொன்குலவு மிராசவிரா மேசனருள்
சோமனெனுஞ் சுருதி யோனே.
என்றுங் கூறுவதிலிருந்து. ஆரியர் கோனான செகராசசேகர மன்னன், ஆணைப்படி இச்சோதிட நூலை அம்மன்னன் பெயரால் இராச பரம்பரையினனான இராமேசன் மகன் சோமன் எனும் வேதியன் இயற்றினான் என்று தெரிகின்றது. இவ்வாசிரியர் பெயர் சோமசன்மா என வழங்கும்.
இந்நூலின்கண் பதின்மூன்று பாக்களிற் சிங்கைச் செகராசசேகரனின் புகழ் கூறப்படுகின்றது. அவற்றுள் நூலின் 36ஆவது செய்யுளில்,
சீரியவேற் பரநிருப ரிறைஞ்சும் பொற்றாட்
செகராச சேகரமன் சிங்கை தங்கு
மாரியர்கோ னெனக்குடைக்கீ ழவனி யெல்லா
மடக்கியொரு கோலோச்சி யளிக்கு மாதே
என்றும், 76 ஆவது செய்யுளில்,
சேவணி துவசன் சிங்கையெங் கோமான்
செயசெக ராசசே சரமன்
என்றும், 86 ஆவது செய்யுளில்,
சேது காவலன் விஞ்ஞை விஞ்சுசெக
ராச சேகரன்
என்றும், 158 ஆவது செய்யுளில்,
மன்னர் மன்னுசெக ராச சேகரமன்
மணவை யாரியவ ரோதயன்
பன்னு செந்தமிழ்வ ளம்பெ றற்குதவு
பரிசில்…………………..
என்றும் 204 ஆவது செய்யுளில்,
வையமன்று காத்தியா யனசூத் ரத்து
மன்னியகா சிபகோத்ர மருவு கேண்மைச்
செய்யசதுர் மறைவாய்மைக் காசி வந்த
செகராச சேகரனா மன்ன னாதி
துய்யபுகழ்ப் பூசுரமன் னவரை…
என்றும், சொல்லப்படுவதால், இந்நூல் இடபக்கொடி உடையவனும், சேதுகாவலனும், காசிப கோத்திரத்துக் காசி மறையோனும், பூசுரமன்னனுமான மணவை ஆரியவரோதய சி;ங்கைச் செகராசசேகரன் ஆட்சிக் காலத்திற் செய்யப்பட்டதெனத் தெரிகின்றது. வரோதய சிங்கையாரியன் மூன்றாம் செகராசசேகரன் ஆவான் என்பர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்.
ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ்ப்பாண அரசு கைக்கொண்ட கி. பி. 13 ஆம் நூற்றாண்டுக்கும், கோட்டை அரசன் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி ஆறாம் செகராசசேகரன் அரசிழந்த கி. பி. 1450 ஆம் ஆண்டுக்கு மிடைப்பட்ட காலத்தவனாவான் இச் செகராசசேகரன். எனவே, செகராசசேகர மாலையும் அக்காலத்துக்குரியதெனக் கொள்ளலாம்.
செகராசசேகரமாலை என்கின்ற இச்சோதிட நூல் பற்றிய குறிப்பு கலாநிதி க. செ. நடராசா அவர்களால் எழுதப்பெற்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் 1982 இல் வெளியிடப்பெற்ற ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி எனும் நூலில் இருந்து எடுக்கப்பெற்றது. மேலதிகமாக கலாநிதி .சி. க. சிற்றம்பலம் அவர்களால் பதிப்பக்கப்பெற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினூடாக 1992 இல் வெளியிடப்பெற்ற யாழ்ப்பாண இராச்சியம் என்கின்ற நூலும் உசாத்துணையாகக் கொள்ளப்பெற்றது
Labels:
செகராசசேகரமாலை,
நூல்,
யாழ்,
யாழ்ப்பாணம
பரராசசேகரம்
தன்வந்திரி என்பார் வடமொழியிற் செய்த ஆயுள்வேத நூலைத் தழுவியே இது செய்யப்பட்டிருக்கின்ற தென்பதனை இதன் கடவுள் வணக்கச் செய்யுள்களுளொன்றாய
தரணியோர் மிகப்புகழ்ந்ததன் வந்த்ரி செய்த
தகவுடைய சீர்த்திபெறு மாயுள் வேதப்
பேரணியும் வாகடத்தைப் பெரிது பேணிப்
பெட்புடைய தமிழ்ப்பாவாற் பேசும் வண்ணம்
சீரணியுந் திருமாலு மயனுங் காணாச்
சிவபெருமா னளித்தருளு மொருவெண் கோட்டுக்
காரணிமெய் யைங்கரத்து நால்வாய் முக்கட்
கடவுளிரு பதபுயங்கள் கருத்துள் வைப்பாம்.
எனும் விருத்தங் கூறும்.
இதனைத் தமிழிற் செய்தார் யார் என்பதற்கான ஆதர மெதுவுங் கிடைக்கவில்லை. இந்நூல் பரராசசேகர மன்னன் காலத்திற் செய்யப்பட்டதென்பதனை நூலின்கண் அவன் புகழ் சுறும் செய்யுள்கள் காட்டி நிற்கும். உதாரணமாக சுரசூலையின் சிகிச்சை பற்றி கூறும் செய்யுளில்,
பாரின் மேவுதிற லரச னானபர
ராச சேகரனை யண்டினோர்
சீரின் மேவிவளர் செல்வ மல்கவவ
ரின்மை தீருமது செய்கைபோல்
என்றும், நயனரோகம் பற்றிக் கூறுஞ் செய்யுளில்,
பார்மேவு மரசர்குல திலக மான
பரராச சேகரன்மால் பருதி யேந்தி
ஏர்மேவு முலகுபுரந் தருளி நாளி
லிசைத்தனனைங் கரத்தரியை யிறைஞ்ச லுற்றே.
என்றும், திரிபலைக் குழம்பு பற்றிக் கூறும் செய்யுளில்
பார்த்திவர்க ளேனுநோய் தொலைக்கு மீதே
பரராச சேகரன்மன் பணித்த செங்கோல்
காத்தபுவி யோர்களிரு ணீக்கு மாபோற்
கண்ணிலிரு ணீக்குமிது திண்ணந் தானே
என்றுங் கூறப்படுவதிலிருந்து, இது பரராசசேகர மன்னன் காலத்திற் செய்யப்பட்ட நூலென்றறியலாம். ஆயின், எப்பரராசசேகரன் காலத்ததென்பதை நிச்சயமாக கூற ஆதாரமெதுவுமில்லை. எனவே, இது ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்து நூல் என்று மட்டுமே இப்பொழுது கூறத்தக்கதாயுள்ளது.
இந்நூல் பெரும்பான்மை விருத்தப்பாவாலும், சிறுபான்மை ஆசிரியப்பா, கலிவெண்பா ஆகியவற்றாலும் செய்யப்ட்டுள்ளது. ஆதியிலிருந்த பரராசசேகரம் என்ற நூலின் சில பகுதிகள் கிடையாமையால், அவை அச்சுப் பதிப்பிற் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்று அதன் பதிப்பாசிரியர் ஏழாலை ஐ. பொன்னையாபிள்ளை கூறியுள்ளார்.
பரராசசேகரம் என்கின்ற இந்த வைத்திய நூல் பற்றிய குறிப்பு கலாநிதி க. செ. நடராசா அவர்களால் எழுதப்பெற்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் 1982 இல் வெளியிடப்பெற்ற ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி எனும் நூலில் இருந்து எடுக்கப்பெற்றது
Labels:
நூல்,
பரராசசேகரம்,
யாழ்,
யாழ்ப்பாணம
திருக்கரைசைப் புராணம்
திருக்கரைசைப் புராணம் என்ற நூல் “கரைசை” எனும் பதியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் புகழை விரித்துக் கூறுவதொன்றாகும். இப்பதி திருகோணமலைப் பகுதியில் மகாவலி கங்கைக் கரையோரத்திலே அமைந்துள்ளது. கரைசையம்பதியை அகத்தியதாபனம் எனவும் வழங்குவர். அகத்திய முனிவரே இதனைத் தாபித்தார் என்று இந்நூல் கூறும். இப்புராணம் சூதமுனியருளிச்செய்த வடமொழிப்புராணத்தினை தழுவிச்செய்யப்பட்டது என இப்புராணத்தின் வரலாறு கூறும் பகுதியில் கூறப்பட்ட போதும், தழுவப்பட்ட முதல்நூலின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்நூல் செய்த புலவர் பெயர் தெரியாததாகையால், அவர் செய்த நூற்பெயர் கொண்டு, அவரைக் கரைசைப் புலவர் என்ற காரணப்பெயராலழைப்பர். எனினும், நூலகச் சான்று கொண்டு அவர் ஈசானச் சிவனைக் குருவாகக்கொண்டவரென்றும், “கொற்றங்குடி வாழும் பிரான் சரவணத்துறுதி” கொண்டவர் என்றும் தெரிகின்றது. இவற்றிற்காதாரமாக அந்நூற் குருவணக்கமாய
அண்டர்பிரா னடமாடுந் தில்லைமணி
மன்றதனி லகலா தென்றும்
விண்டசிவ சித்தாந்த வேதாந்தப்
பொருள்விளக்கும் விளக்க மாகித்
தொண்டறியா நாயேனுக் கருள்புரிந்து
கிளைமுழுதுந் தொழும்பு கொண்ட
எண்டகுசீ ரீசானச் சிவன்மலர்த்தாண்
மறவாதென் னிதயந் தானே
மன்றதனி லகலா தென்றும்
விண்டசிவ சித்தாந்த வேதாந்தப்
பொருள்விளக்கும் விளக்க மாகித்
தொண்டறியா நாயேனுக் கருள்புரிந்து
கிளைமுழுதுந் தொழும்பு கொண்ட
எண்டகுசீ ரீசானச் சிவன்மலர்த்தாண்
மறவாதென் னிதயந் தானே
என்ற செய்யுளையும்
அதன் புராண வரலாறு கூறும் செய்யுள்களில்,
வண்ணமலி வடகலைக் கொடுமுடியாந்
தென்கலை மணியார் தன்மைத்
தண்ணமரு மலரிட்டுத் தாடொழுவான்
பொருட்டங்ஙன் சாராநின்ற
கண்ணகலுங் கலைஞானத் தெளிவனைத்துங்
கைவந்த கலச யோனி
அண்ணலுமுத் தரமுகமே யாக்கியமா
வலிகங்கை யாடும் போதில்
தென்கலை மணியார் தன்மைத்
தண்ணமரு மலரிட்டுத் தாடொழுவான்
பொருட்டங்ஙன் சாராநின்ற
கண்ணகலுங் கலைஞானத் தெளிவனைத்துங்
கைவந்த கலச யோனி
அண்ணலுமுத் தரமுகமே யாக்கியமா
வலிகங்கை யாடும் போதில்
ஆங்கொருபே ரற்புதமா வசரீரி
வாசகத்தா லண்ண லார்தம்
பாங்கமருந் தென்மலயம் பயின்றதமிழ்க்
குறுமுனிவ பயிலு கின்ற
வீங்கமரு மிக்கங்கை யிரும்பெருமை
யியல்பிவையா மிங்ங னீயு
மோங்கநம்மைத் தாபனஞ்செய் திடுதியென
வுவனறிய வுரைத்திட் டாரால்
வாசகத்தா லண்ண லார்தம்
பாங்கமருந் தென்மலயம் பயின்றதமிழ்க்
குறுமுனிவ பயிலு கின்ற
வீங்கமரு மிக்கங்கை யிரும்பெருமை
யியல்பிவையா மிங்ங னீயு
மோங்கநம்மைத் தாபனஞ்செய் திடுதியென
வுவனறிய வுரைத்திட் டாரால்
அக்கணமே தாபனஞ்செய் தவ்விறைக்குச்
சூதமுனி யருளிச் செய்த
மிக்கதிரும் வடபாடைப் புராணத்தைத்
தென்கலையின் விருத்தப் பாவாற்
றிக்கிசைய வருந்தொண்டர் செய்தியென
வென்னறிவுஞ் சிறிது சேர்த்தி
ஒக்கவுரைத் தனன்கொற்றங் குடிவாழும்
பிரான்சரணத் துறுதி கொண்டே
சூதமுனி யருளிச் செய்த
மிக்கதிரும் வடபாடைப் புராணத்தைத்
தென்கலையின் விருத்தப் பாவாற்
றிக்கிசைய வருந்தொண்டர் செய்தியென
வென்னறிவுஞ் சிறிது சேர்த்தி
ஒக்கவுரைத் தனன்கொற்றங் குடிவாழும்
பிரான்சரணத் துறுதி கொண்டே
ஆகிய விருத்தங்களைக் காட்டலாம்.
இவர் காலத்தை உறுதியாக கூறக்கூடிய சான்றுகள் ஏதும் இப்போது இல்லை. இப்புராணத்தை வே. அகிலேசபிள்ளை என்பார் 1893இலே பதிப்பத்து வெளியிட்டார்.
இந்நூலின்கண் கடவுள் வாழ்த்து, குருவணக்கம், புராண வரலாறு, அவையடக்கம் ஆகியன கொண்ட பாயிரப்பகுதிகளை விட இலங்கைச் சருக்கம், கங்கைச் சருக்கம், தாபனச் சருக்கம், பூசைச் சருக்கம் ஆகிய நான்கு சருக்கங்களுள. இதனை ஒரு தலபுராணம் என்றே கொள்ளத்தகும்.
Subscribe to:
Posts (Atom)