Showing posts with label யாழ்ப்பாண மக்களின் புலப்பெயர்வு. Show all posts
Showing posts with label யாழ்ப்பாண மக்களின் புலப்பெயர்வு. Show all posts

யாழ்ப்பாண மக்களின் புலப்பெயர்வு

பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காக, ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு மக்கள் இடம் பெயர்ந்து செல்லுதல் புலப்பெயர்வு ஆகும். யாழ்ப்பாண வரலாற்றில் புலப்பெயர்வு ஒரு பொதுவான தோற்றப்பாடாக இருந்துவருகிறது. யாழ்ப்பாண மக்களின் புலப்பெயர்வு மிகப் பழைய காலம் முதலே நடந்து வருகின்றது ஆயினும் இருபதாம் நூற்றாண்டில் இது அதிகமாக உள்ளது.
யாழ்ப்பாண அரசுக்கு முந்திய காலம்

யாழ்ப்பாண அரசுக்கு முந்திய காலத்தில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் குடியேற்றப் பரம்பல் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவு. தென்னிந்தியத் தமிழ் இலக்கியங்களிலும், இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்திலும் ஆங்காங்கே யாழ்ப்பாணப் பகுதி பற்றிய தகவல்கள் சில கிடைத்தாலும் அவை போதுமானவையல்ல. அக்காலத்தில் யாழ்ப்பாணப் பகுதி பெருமளவு குடித்தொகை கொண்டதாக இருந்திருக்கும் எனச் சொல்லமுடியாது. அப்போது இலங்கைத் தீவிலிருந்த யாழ்ப்பாண மக்களின் முன்னோர்கள் பலர் யாழ்ப்பாணப் பிரதேசத்துக்கு வெளியில் வன்னிப் பகுதிகளிலும், சிங்கள அரசர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இருந்திருக்ககூடிய சாத்தியங்கள் உண்டு. வன்னியில் தற்போதைய மன்னார் மாவட்டத்திலுள்ள மாதோட்டப் பெருந்துறையிலும் அண்டியிருந்த குடியேற்றங்கள் பலவற்றிலும் பெருமளவில் தமிழர் இருந்தனர். அனுராதபுரம், பொலநறுவை போன்ற பண்டைய இலங்கைத் தலைநகரங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர் வாழ்ந்துவந்தனர். மாதோட்டத் துறைமுகத்தின் செல்வாக்கு இழப்பும், தென்னிலங்கையின் சிங்கள அரசுகளின் தெற்கு நோக்கிய நகர்வும் அடிக்கடியேற்பட்ட தென்னிந்தியப் படையெடுப்புக்களும் இலங்கைத் தீவில் இன அடிப்படையிலான முனைவாக்கத்தை ஏற்படுத்தின. இவை தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்துக்கு வெளியிலிருந்து யாழ்ப்பாணத்துக்குள் வந்த உள்நோக்கிய புலப்பெயர்வை ஏற்படுத்தியது.

யாழ்ப்பாண அரசுக் காலம்

இந்த முனைவாக்கம் யாழ்ப்பாண அரசுக் காலத்திலும் தொடர்ந்தது. இதனுடன் கூடவே தென்னிந்தியாவிலிருந்தும் மக்கள் யாழ்ப்பாணத்துக்குள் வந்தனர். யாழ்ப்பாண வரலாற்று நூல்களான யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை, வையாபாடல் போன்றவை இது பற்றிக் கூறுகின்றன.

போத்துக்கீசர் காலப் புலப்பெயர்வுகள்

போத்துக்கீசர் காலத்திலும் இரண்டு விதமான புலப்பெயர்வுகள் இடம் பெற்றதாகத் தெரிகின்றது. ஒன்று போர்த்துக்கீசரின் இந்து சமயத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பானது. சமய உணர்வு மிக்க இந்து மக்கள் பலர் தங்கள் ஊர்களை விட்டு மறைவான பகுதிகளுக்குச் சென்றமை பற்றிய வாய் வழித் தகவல்கள் உண்டு. சிலர் இந்தியாவுக்குத் தப்பியோடியதும் உண்டு. என்றாலும் இவ்வாறான புலப்பெயர்வுகள் பெருமளவில் நடைபெற்றதாகத் தெரியவில்லை. இதைவிட வன்னிக்கு ஊடாகப் போக்குவரத்துச் செய்யும் போத்துக்கீசப் படைகளின் அட்டூழியங்கள் காரணமாக பல ஊர்கள் கைவிடப்பட்டதும் போத்துக்கீசர் குறிப்புக்களில் பதியப்பட்டுள்ளன. இவ்வாறு வெளியேறியோரில் பலரும் யாழ்ப்பாணப் பகுதியில் குடியேறியிருப்பது சாத்தியம்.

மலாயா, சிங்கப்பூருக்கான புலப்பெயர்வு

யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பப் பத்தாண்டுகளில் கல்வி கற்ற மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி ஏற்பட்டது. அக்காலத்தில் மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட சில வகையான அரச பதவிகள் யாழ்ப்பாண மக்களுக்குப் பொருத்தமாக அமைந்ததால் பெருமளவு யாழ்ப்பாண இளைஞர்கள் இந்த நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். ஆரம்பத்தில் தனியாகவே சென்ற இவர்கள் தங்களை நிலைப்படுத்திக்கொண்ட பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்து திருமணம் செய்து தங்கள் மனைவியரையும் அங்கே அழைத்துக்கொண்டார்கள். இது யாழ்ப்பாணத்தவரின் வெளிநோக்கிய புலப்பெயர்வின் ஆரம்ப கட்டம் எனலாம்.

Read more...

யாழ் பொது நூலகம் எரிப்பு, 1981

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது

பின்னணி

யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன[4][5]. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது[4][5].

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP